கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?

Elephant and Spider Story at Thiruvaanikavu
Jambukeswarar Temple, Thiruvanaikaval

நந்தனா  ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள்.

அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில் எல்லா இடத்திலும் படம் வரைந்து வைத்து இருக்கிறார்கள்?”, என்று கேட்டாள் நந்தனா.

“நந்தனா, எல்லா கோவில்களிலும் இது போன்ற படங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு கதை மூலமாக நமக்கு பல அழகான விஷயங்களை உணர்த்தும்”, என்றார் நந்தனாவின் தந்தை.

நந்தனா ஒரு படத்தை பார்த்துவிட்டு  “ஒரு யானை தன் தும்பிக்கையால் லிங்கத்தின் மீது தண்ணீர் அபிஷேகம் செய்கிறது. ஒரு சிலந்தி  லிங்கத்தின் மேல்புறத்தில் ஒரு வலை விரித்திருக்கிறது. இது என்ன கதை?”, எனக் கேட்டாள்.

Nandhanas Story thedal

“இது ஒரு சுவாரஸ்யமான கதை. புஷ்படந்தா, மாலியவான் என்ற இரு சிவ பக்தர்கள் கைலாசத்தில் இருந்தார்கள். எப்பொழுதும் தன் பக்தியும்,  தான் சிவனுக்கு ஆற்றும் சேவையுமே  பெரியது என்று சண்டை போட்டுக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் எல்லை மீறி சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்குமாறு  ஒருவருக்கொருவர் சபித்துக்கொண்டனர்”.

“அப்படியே சிலந்தியாகவும் யானையாகவும் ஒரு காட்டில் பிறந்தனர். ஒரு மரத்தடியில்  இருந்த  சிவலிங்கத்தின் மீது உலர்ந்த இலைகள் விழுவதைத் தடுக்க தினமும் சிலந்தி லிங்கத்தின் மீது ஒரு வலையை உருவாக்கும். அடுத்த நாள் காலையில் வலையைப்  பார்த்த யானை அதை அகற்றி, லிங்கத்தை தண்ணீரில் சுத்தம் செய்யும். இதனால் சிலந்தி கோபமடைந்து  யானையின் காதுக்குள் நுழைந்து அதைக் கொன்றது. சிலந்தியும் யானையின் காதில் சிக்கி இறந்து போனது.

மற்றவர்கள் செய்யும் சேவையை இழிவாக எண்ணுவதும், நாம் செய்யும் சேவையே சிறந்தது என்ற கர்வம்  கொள்வதும் தவறு என்று இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை செய்தால்தான் கடவுளுக்கு பிடிக்கும். அப்பொழுதான் கடவுள் வேண்டிய வரங்களை தருவார் என்ற தப்பான அபிப்பிராயம் பலருக்கும் உண்டு.  கோவிலை சுத்தம் செய்யும் வேலை, புஷ்பங்கள் தொடுத்துக்கொடுப்பது, பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வேலை என்று நம்மால் முடிந்த எந்தப் பணியை செய்தாலும் அது கடவுளுக்கு மிகவும் பிடித்த பணியே ஆகும்”, என்றார் அவள் தந்தை.

“கதை நன்றாக இருக்கிறது அப்பா. ஆனால் இந்த கோவிலுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் நந்தனா.

“இறந்த அந்த யானைக்கு சிவபெருமானால் உடனே விமோசனம் வழங்கப்பட்டது. யானையை கொன்ற காரணத்தினால் பாவத்திலிருந்து விடுபட சிலந்தி மற்றொரு பிறப்பை எடுக்க வேண்டியிருந்தது. சிலந்தி சோழ வம்சத்தில் கோச்செங்கட் சோழனாக பிறந்தது. அவர் கட்டிய பல சிவன் கோவில்களில் இந்த ஜம்புகேஸ்வரர் கோவிலும் ஒன்று. அவர் பிற்காலத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராக கோச்செங்கட் சோழ நாயனார் என்ற பெயரில் வணங்கப்பட்டார்”, என்றார் அப்பா. 

“அப்படி என்றால் பிரசாதம் கொடுக்கும்போது நான் தொன்னை கொடுக்கிறேனே. இந்தக் கதைப்படி என்னையும் கடவுளுக்கு பிடிக்குமா?”  என்றாள்  நந்தனா.

“கண்டிப்பாக! நீ தான் கடவுளின் முதல் சேவகி!” என்றார் அவள் அப்பா சிரித்தபடி.

என்னுடைய முந்தைய பதிவுகள்

குழந்தைகளுக்கான கர்ணன் கதை

குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா?

Thedal Subscription
Subscribe to Thedal Today!

Author Details

My  quest to learn more about our culture and history is never-ending. Being  a student of  Sri Ramakrishna mission, Sri Ahobila Math school and Vivekananda College, what else can you expect other than the influence of our rich Indian culture and tradition? Through this website my humble attempt is to inculcate the highest knowledge of our culture to young minds in simple words.

11 thoughts on “கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *