வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு

நம் சமயத்தில் பல விரதங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றன. அவற்றில் பகவான் விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருக்க ஏற்ற நாள் ஏகாதசி நாளாகும். ஏகாதசி என்பதற்கு வடமொழியில் ‘பதினொன்று’ என்று பொருள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி கழித்து வரும் பதினோராவது திதி (நாள்) ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி நன்னாளில் விரதத்தை பக்தியோடு கடைப் பிடிப்பவர்களுக்கு யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பது புராணங்களின் வாக்கு.

பத்ம புராணத்தில் ஏகாதசி மகிமை இவ்வாறு கூறப்படுகிறது:

ந காயத்ரியா: பரம் மந்த்ர:  ந மாத்ரூணாம் பர தைவதம் |
ந கங்காஸ்யா: பரமம் தீர்த்தம், ந  ஏகாதஸ்யா: சமம் வ்ரதம் !!

“காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் எதுவுமில்லை. தாயை விடச் சிறந்த தெய்வம் வேறில்லை. கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை. அது போல ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை. “
இதன் மூலம் நாம் ஏகாதசி நாள் விரதத்தின் சிறப்பை நன்கு அறியலாம்.
அது போல தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்திற்கு மிகப்பெரும் ஏற்றம் உள்ளது. பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாகக் கூறுகிறார் (‘மாஸானாம் மார்கஷீர்ஷோஹம்’).  நம் ஒரு வருடகாலம் தேவர்களுக்கு ஒரு நாளாக அமைந்திருக்கிறது. அந்தக் கணக்கில், மார்கழி மாதம் அவர்களுக்கு ப்ரம்மமுகூர்த்தமாக அமைகிறது (முன் விடியற்காலை). இது இறை வணக்கத்திற்கு மிக உகந்த காலமாகக் கருதப்படுகிறது.

இப்படியாக மார்கழி மாதமும் ஏகாதசியும் சேர்ந்த நாளின் மேன்மையைச் சொற்களால் விவரிக்க முடியாது. மார்கழி மாதம் சுக்லபக்ஷத்தில் (அமாவாசையில் இருந்து பதினோராவது நாள்) நிகழும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஒரு நாள் விரதம் இருந்தால் வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கிறது. இந்நாளில் பெருமாள் வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்து நமக்காகக் காத்திருப்பதாக ஐதீகம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது இந்த நாளில் தான் அமிர்தம் வெளிப் பட்டதாக நம்பிக்கை. அதே போல் மகாபாரத யுத்தத்திற்கு முன் பகவான்  கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த நாளில் பகவத் கீதையை உபதேசித்ததாக நம்பப்படுகிறது.

பரமபத வாசல், ஸ்ரீரங்கம்

இந்நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் என்னும் சிறப்பு நுழைவாயிலில் பெருமாள், தாயார் சமேதராக அனைவருக்கும் அருள்பாலிக்கிறார்.  திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் மொத்தம் இருபத்தொரு நாட்கள் (பகல்பத்து, ஏகாதசி, இராப்பத்து) இந்த உற்சவம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இதே போல திருப்பதி முதலான பல திவ்ய தேசங்களிலும் பிற பெருமாள் கோவில்களிலும் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருத்தல்
ஏகாதசியன்று விரதமிருந்தால் பல நற்பயன்கள் கிட்டும். அதிலும் வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பவர்க்கு மோட்சம் நிச்சயம் என்று கிருஷ்ண பரமாத்மா உபதேசிக்கிறார்.  விரதமிருப்பவர்கள் முன் நாள் இரவிலிருந்தே விரதத்தைத் தொடங்கி இரவு முழுதும் கண் விழித்து இறைவனின் நாமங்கள் மற்றும் பாடல்களை பாடிக்கொண்டு இருப்பர். மறுநாள் காலை சிரத்தையுடன் விஷ்ணு கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவர். அடுத்த நாளான துவாதசி அன்று விடியற்காலை அகத்தி கீரை, நெல்லிக்காய் முதலிய பிரத்யேக பதார்த்தங்களை சேர்த்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்வர். அகத்திக் கீரை மற்றும் நெல்லிக்காய், பட்டினி இருந்த வயிற்றுக்கு மருந்தாக வேலை செய்யக்கூடியன.
விரதம் இருப்பதால் பல பயன்கள் கிடைக்கின்றன. நம்முடைய அனைத்து உடல் பாகங்களும் (உள் மற்றும் வெளியில் இருப்பன), மனம் உட்பட சுத்திகரிக்கப் படுகின்றன. நோய் அறிகுறிகள் இருக்குமாயின் அவை குணமாகின்றன. படிப்படியாக உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது. மனம் லேசாகிறது. இன்றைய அறிவியலும் விரதத்தின் மகத்துவத்தை பறை சாற்றுகிறது. இவற்றைத் தவிர, உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களின் வலியையும் நாம் அறிய முடிகிறது. அவர்களுக்கு உதவும் மனப்பான்மை நம்மிடம் அதிகரிக்கிறது. எனவே விரதம் இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் அனைவராலும் வைகுண்ட ஏகாதசியன்று முழு விரதம் இருக்க முடிவதில்லை. வேலைப்பளு, வயோதிகம், நோய் போன்ற காரணங்களால் நம் முயற்சி தடை படக்கூடும். அத்தகைய சமயங்களில் நாம் கீழ்க்கண்டவற்றில் சிலவற்றை முயற்சிக்கலாம்.

  1. குறைந்த பட்ச விரதம் இருக்கலாம்– பழங்களை உண்ணலாம் அல்லது அரிசி உணவைத் தவிர்க்கலாம். அன்று ஒரு நாளாவது வெளி உணவு/துரித உணவுகளைத் துறக்கலாம். இது குழந்தைகளுக்கும் ஏற்ற விரதமாகும் அல்லவா?  
  2. நாம ஜபம்  – இறைவனின் நாமங்களை நாள்முழுதும்  தொடர்ந்து உச்சரிக்கலாம்
  3. கோயில் தரிசனம் – அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம்
  4. நம் நூல்களை படித்தல் – இராமாயணம், பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற நூல்களை படிக்கலாம்.
  5. அறச்செயல்களைச் செய்யலாம் – ஏழை மக்களுக்கு உதவலாம். கால்நடைகள் மற்றும் இதர பிராணிகளுக்கு உணவு அளிக்கலாம். இந்த தினத்தன்று பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுத்தல் மிக்க நன்மை பயக்கும்.

நம் பண்டிகைகளும் அறம் சார்ந்த வாழ்க்கைமுறையும் எவ்வாறு பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்பதற்கு இந்த வைகுண்ட ஏகாதசி நாளே ஒரு நல்லுதாரணமாகும்.
இந்நாளில் நற்செயல்கள் பல செய்து அந்த அரங்கன் அருளால் நாம் அனைவரும் பேரின்பமான வீடு பேற்றைப்  பெறுவோமாக.  
 

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

7 thoughts on “வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு”

  1. All Your detailed explanations are very useful. Very big benefit is “follow the system with reasons”

  2. Hi Sir,
    Amazing article on Vaikunta Ekadasi.
    Learnt a lot .
    Namaskar 🙏🏻 And Grateful to you…
    Regards
    PSRadhakrishnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *