வாமனரின் மூன்றடி உணர்த்தும் மூன்று உண்மைகள்

விஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் வாமன அவதாரம் மிகச் சிறந்தது. ராம கிருஷ்ண அவதாரங்களைப் போல் வாமன அவதாரம்  மக்களிடையே பிரபலமாகாதது சற்று வியப்பையே அளிக்கிறது.இந்த அவதாரம் தசாவதாரத்தின் முதல் மனித அவதாரமாகும். இந்த அவதாரத்தில் பகவான் யாரையும் சம்ஹராம் செய்ய வில்லை.  இது போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

vamana avatar Thedal
வாமனர் தனது பெற்றோருடன்

ப்ரஹலாதனின் பேரனான மஹாபலி குரு சுக்ராச்சார்யரின் வழிகாட்டுதலில் பல யாகங்கள் செய்து பல சக்திகளை பெற்று தேவலோகத்தை கைப்பற்றினான். அதனால் தேவேந்திரன் அங்கிருந்து தப்பித்து ஒளிந்து கொள்ள நேர்ந்தது. கஷ்யப ரிஷியின் மனைவி அதிதி, தன் மகன் தேவேந்திரனை காப்பாற்றுவதற்காக, கடுமையான விரதத்தில் ஈடுபட்டு பகவான் விஷ்ணு தனக்கு மகனாக பிறக்கும் வரத்தைப் பெற்றாள். ஆவணி மாத துவாதசியில் ஷ்ரவண நக்ஷரத்தில் அதித்திக்கும் கஷ்யப முனிவருக்கும் மகனாக பிறந்தார் மஹாவிஷ்ணு. மிகவும் குள்ளமாக இருந்ததால் வாமனர் என்று அழைக்கப்பட்டார்.

தேவலோகத்தை நிரந்தரமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்ட மஹாபலி அஸ்வமேத யாகம் செய்து நர்மதா நதி கரையில் பிராமணர்களுக்கு தானம் வழங்கிக்கொண்டிருந்தான். அங்கு வந்த வாமனர் மூன்று அடி நிலத்தை தானமாக கேட்டார். வந்திருப்பவர் யார் என்பதை அறிந்த சுக்ராச்சாரியார் மஹாபலியைத் தடுக்க முயற்சித்தார். அவன் அதைக் கேட்காததால் ஒரு வண்டாக உருவெடுத்து கமண்டலத்தில் புகுந்துக்கொண்டு நீரை வெளிவரவிடாமல் தடுத்தார். வாமனர் ஒரு தர்ப்பையால் அந்த வண்டை வெளியே தள்ளினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் குருடானது.

வாமனரின் மூன்றடி உணர்த்தும் மூன்று உண்மைகள்
வாமன அவதாரம்

தான் கேட்ட தானத்தைப் பெற வாமனர் தன் உருவத்தை பெருக்க ஆரம்பித்தார்.  எந்த அளவுக்கு என்றால்  வானத்தில்  உள்ள நக்ஷத்திரங்கள் அவரின் பாதங்களுக்கு ஆபரணங்களை போல் காட்சி  அளித்ததாம். தனது ஒரு காலால் பூலோகத்தையும், மற்றொரு காலால் மேல்  லோகத்தையும் அளந்தபின் மூன்றாவது அடியை எங்கு வைக்கவேண்டும் என்று மஹாபலியிடமே கேட்டார். கர்வ பங்கம் அடைந்த மஹாபலி அதனைத் தன்  தலையில் வைக்குமாறு கூறினார்.  இதைக்  கண்டு மகிழ்ந்த பகவான் மகாபலியை பாதாள உலகிற்கு அரசனாக்கி அடுத்த தேவேந்திர பதவி மஹாபலிக்குதான் என்று ஆசிர்வதித்தார். மேலும் மகாபலியின் அரண்மனை வாயிற்காப்பானாக தாமே இருக்கப்  போவதாக அவர் வாக்களித்தார்.

வாமனர் பிறந்த நாளான ஆவணி மாத தவாதசியில் வரும் திருவோண நக்ஷத்திர நாளை ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மஹாபலி சக்கரவர்த்தி இந்த நாளன்று த்ரிக்ககராவில் (கொச்சி அருகில் உள்ள கோவில்) உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டாட பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக சான்றோர்கள் வாக்கு.

ஸ்ரீமத் பாகவதம் படிப்பதின் மூலம் அனைத்து அவதாரங்களின் மகத்துவங்களையும் நம் வாழ்க்கைக்கு உதவும் ஆழமான கருத்துக்களையும் தெரிந்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு  நம்மில் பலர் நினைப்பதைப்போல் பகவான் மூன்றாவது அடியை மஹாபலியின் தலையில் வைக்கவில்லை என்பதையும் அதிதி எப்படி விரதம்  இருந்து பகவானையே மகனாகப் பெற்றாள் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

வாமன அவதாரம் உணர்த்தும் உண்மைகள்.

1. ஒருவன் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் உண்மையாக தர்ம காரியங்களில் ஈடுபட்டு, கொடுத்த வாக்கை காப்பாற்றினால் மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை அசுரர் குலத்தில் பிறந்த மஹாபலிக்கு கிடைத்த அருள் நமக்கு உணர்த்துக்கிறது.

2. ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்களை தடுக்க முயற்சித்தால் என்னவாகும் என்பதை குரு சுக்ராச்சாரியரின் கண் குருடான சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

3. மகாபலியைக் காக்கும் கடமையை பகவானே ஏற்றுக்கொண்டுதன் மூலம் ஒருவன் தன்னிடம் சரண் அடைந்தால் அவனை பகவான் காப்பாற்றுவார் என்ற சரணாகதியின் முக்கியத்துவத்தை இந்த சரித்திரம்  எடுத்துக்காட்டுகிறது.

இனி ராமர் கிருஷ்ணர் வேடங்களைப்  போலவே நம் குழந்தைகளை வாமனராகவும் மாறுவேட போட்டிகளில் பங்குபெறச் செய்து இந்த அவதாரத்தின் சிறப்புகளை உணரச் செய்யலாமே!

                                                                     ***

இந்த கட்டுரை தினமலரின் ஆன்மீக மலரில் வெளியிடப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தினமலரின் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளனர். www.dinamalar.com/aanmeegamalar

முந்தைய சில பதிவுகள்.

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?

அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?

இன்று போய் நாளை வா – ஆன்மீகமும் சினிமாவும்

இன்றைய கடவுள் –  ஆன்மீகமும் சினிமாவும்

2 thoughts on “வாமனரின் மூன்றடி உணர்த்தும் மூன்று உண்மைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *